மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில், சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைவாசிகள் மறுவாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் சிறைத்துறை மூலம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மத்திய சிறைச்சாலை சிறைவாசிகள் மூலமாக எழுதுபொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்ட அரசு அலுவலங்கள், நீதின்றங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த பொருட்கள் விற்பனையில் போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் புகார் எழுந்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி-யால் மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த மோசடி புகார் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களையும், மூலப்பொருட்களை கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட்ட ரசீதுகளையும் ஆய்வு செய்ததில், ரூ 1.51 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது

இதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளிலும் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தணிக்கைத்துறை தெரிவித்து, ஊழல் தடுப்பு இயக்குநரக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் நடத்திய விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் மதுரை சிறையில் அப்போது எஸ்.பி-யாக பணியாற்றிய ஊர்மிளா (தற்போது கடலூர் மத்திய சிறை எஸ்.பி) சிறை அதிகாரி வசந்தகண்ணன் (தற்போது பாளையங்கோட்டை சிறை ஏடிஎஸ்பி) தியாகராஜன் (தற்போது வேலூர் சிறை நிர்வாக அதிகாரி) உட்பட மதுரையைச் சேர்ந்த ஜாபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையைச் சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.