ஒரு மாதத்திற்கு முன்பே சாக்கடையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி, இன்னும் சரி செய்யாமல் போடப்பட்டுள்ளது. இது சாலையின் நடுவே உள்ளதால் அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் வேதனைப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இதே சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து சங்கிலி தேவர் சந்துக்கு செல்லும் வழியில் சாக்கடையை பராமரிப்பதற்காக தோண்டப்பட்ட குழி மீண்டும் சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “சாக்கடையை பராமரிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே இதனை தோண்டினார்கள். ஆனால் அதன் பிறகு இப்படியே தான் இருக்கின்றது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இடையூறுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த குழி இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். இது போன்ற அச்சுறுத்தல்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் இந்த தெருவின் வழியாக செல்ல முடிவதில்லை.
இதனால் வேறு வழியாக சற்றி வர நேரிடுகிறது” என்று கூறுகின்றனர்.
அருகாமையில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள், “இதனால் எங்கள் வியாபாரமே கேள்விக்குள்ளாகும் அளவிற்கு ஆகிறது . ஏனென்றால் சாக்கடையின் துர்நாற்றம் மிக அதிகமாக வீசுவதால் வாடிக்கையாளர்கள் இங்கு அமர்ந்து தேநீர் அருந்தகூட முகம் சுளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இது மழைக்காலம் என்பதால், இப்படி திறந்து கிடக்கும் சாக்கடையால் அதிக அளவு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

மேலும் இந்த இடத்தில் மட்டுமல்ல, காந்தி ரோடு சாலையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட சாக்கடைகள் திறந்த நிலையிலேயே கிடக்கின்றன. மழைக்காலங்களில் இவை அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுப்பதற்காகவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?