டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை மரங்கள் வேர் அழுகல் தாக்குதலால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதாக வாழை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதே போல் இதற்கு முன்பு பெய்த மழையில் நடவு செய்த நெற்பயிர் நீரில் மூழ்கிய நிலையில் தற்போது மீண்டும் நடவு செய்த பயிரும் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மாப்பேட்டை அருகே விவசாயிகள் வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196 மில்லி மீட்டர், கும்பகோணத்தில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் நகரப்பகுதி முழுவதும் மழை நீர் சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். திருவையாறு- சுவாமிமலை சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலான மாமரம் வேருடன் சாய்ந்து சாலை நடுவே விழுந்தது. இதனால் அப்பகுதியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
குறிப்பாக அவ்வழியாக கார்த்திகைக்கு வழிபாடு செய்வதற்காக சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டது. பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அம்மாப்பேட்டை அருகே உள்ள நரசிங்கமங்கள் கிராமத்தில் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் வயலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் இதற்பு முன்பு பெய்த தொடர் மழையில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, வடிகால்கள் முறையாக தூர்வாராததே பாதிப்புக்கு காரணம் என எடுத்து கூறியதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
இந்த நிலையில் இரண்டு தினங்களாக பெய்த மழையில் மீண்டும் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நீர் தேங்கியுள்ள வயலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினோம்” என்றார்.
திருவையாறு பகுதியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகனிடம் பேசினோம். “பூதலூர் ஒன்றியத்தில் பரவலாக பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் வாழை தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. முறையான வடிகால் வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணமாகிறது. வாழை தோட்டத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் இரண்டு நாட்களுக்குள் வடிய வேண்டும். ஒரு வேளை வடியவில்லை என்றாலும், அல்லது மழை தொடர்ந்தாலும் வாழையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிற்பதால் வாழை வேர் அழுகல் தாக்குதல் ஏற்படும். இதனால் வாழை மரங்கள் கீழே விழும் நிலை இருப்பதால், வாழை விவசாயிகள் பாதிப்பை சந்திக்க கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.