“யுவபுரஸ்கார் விருதாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு” – முதல்வரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை

சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்குவது போலக் கனவு இல்லத் திட்டத்தில் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினுக்குச் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற தமிழ்நாடு எழுத்தாளர் குழு கடிதம் எழுதியிருக்கிறது.

அதில், “தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் திராவிட மாடல் நல்லாட்சியில் முன்மாதிரித் திட்டமாக அறிமுகப்படுத்திய, ‘சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம்’ என்னும் மகத்தான திட்டத்தால் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் பலரும், தங்கள் விருப்பம்போல வசிப்பதற்கான வாழ்விடத்தைப் பெற்றுப் பயனடைந்து வருவது நாடறிந்தது.

சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கர் விருது

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, தமிழ்நாடு அரசின் தகைசால்தமிழர் விருது, கலைஞர் பொற்கிழி விருது, தமிழ்ப்பேராய விருது போன்ற அங்கீகாரங்கள் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் சான்றோர்களும் பயனாளிகளாக இணைக்கப்பட்டு, அவர்களுக்குக் கனவு இல்லம் திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது. இதனை இந்தியாவிலேயே பெருமைக்குரிய முன்மாதிரி எனத் தயங்காமல் கூற முடியும்.

சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் செயல்படும் திறன்மிகு படைப்பாளிகளுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்குவது போலவே, சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதும், முப்பத்து ஐந்து வயது (35) வரையிலான படைப்பாளிகளுக்கும் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும், சிறார் இலக்கிய படைப்பாளிகளுக்குச் சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதும் வழங்கிக் கௌரவிக்கிறது. 2011ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 14 பேருக்கு (ஒருவர் மரணமடைந்துவிட்டார்) சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் – ஸ்டாலின்

எனவே, தமிழ்நாடு அரசின் கனவு இல்லம் திட்டத்தில் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர்களான எங்களையும் பயனாளிகளாகச் சேர்த்து கனவு இல்லத்தை எங்களுக்கும் வழங்கப் பரிசீலித்து, ஆவணம் செய்ய வேண்டுகிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளிகளைப் போன்றே, நாங்களும் தமிழ் இலக்கியத்துக்காகவும், பண்பாட்டுக்காகவும், மொழிக்காகவும் கடமைகொண்டு உழைத்தும், பங்களித்தும் வருகிறோம். அதேநேரம், எங்களில் பெரும்பாலானோர் வாழ்வதற்குச் சொந்தமாக இல்லமோ, போதுமான வசதிகளோ இல்லாமல் நெருக்கடியான சூழலிலிருந்து வருகிறோம்.

கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கும் எங்களுக்குச் சம்பளத்தில் கணிசமான பங்கு வாடகை செலுத்துவதில் போய்விடுவதால் அடிக்கடி வீட்டை மாற்றும் நெருக்கடிக்கும், அலைச்சலுக்கும் உள்ளாகிறோம். சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற இளம் எழுத்தாளர்களான எங்களுக்கு அடுத்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணிகளும் சமூகத்துக்குப் பங்களிப்பதற்கான கடமைகளும் காத்துக்கிடக்கின்றன.

ஸ்டாலின்

எழுத்து முதிர்ந்து வளம்பெறும் பருவத்தில், உலகியல் கவலைகள் படைப்பாளிகளைச் சுழற்றி அடிப்பது எல்லாக் காலகட்டங்களிலும் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கல். எங்களுக்குக் கனவு இல்லத் திட்டத்தின்படி, வீடு அளிக்கப்படும்போது, எங்களால் தமிழ் மண்ணில் அடுத்த முப்பதாண்டுகள் காலூன்றி அயராது பணியாற்ற இயலும். ஆகையால், சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, கலைஞர் பொற்கிழி விருது, தகைசால் தமிழர் விருது, தமிழ்ப்பேராய விருது பெற்ற சான்றோர்களுக்குக் கனவு இல்லம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அண்மையில் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்களுக்குக் கனவு இல்லம் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில்கொண்டு, சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கும் கனவு இல்லம் திட்டத்தை விரிவாக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞரின் செயலாண்மை நீட்சியாக ஆட்சி புரிந்துவரும் தாங்கள், தமிழின் பண்பாட்டுக் காவலர்களான படைப்பாளிகள் எங்களது நிலையை உணர்ந்து கனவு இல்லம் என்னும் காப்பு அளித்து உதவ வேண்டும் எனவும் இது எங்கள் வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாக இருக்கும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற தமிழ்நாடு எழுத்தாளர் குழு

இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், அக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01