Syria: தலைநகரை சுற்றி வளைத்த கிளர்ச்சியாளர்கள்… அதிபர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா?

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமாகி இருக்கிறது.

அதிபர் பஷர் அல்-அசாத் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வரும் கிளர்ச்சியாளர்கள், அரசு படைகள் வசமிருக்கும் நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றனர். அலெப்போ, டெல்ரிப்ஃபாட் ஆகிய நகரங்களை தொடர்ந்து ஹமா நகரை தங்கள் வசம் வைத்துள்ளனர். பல இடங்களில் ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் வேகமாக தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறி வருவதாகவும் இன்னும் சில நாள்களில் டமாஸ்கஸை முழுமையாக கைப்பற்றி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த சிரியா போரில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் களமிறங்கி உள்ளன. இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை நெருங்கி வரும் சூழலில் சிரியா அதிபர் அல் அசாத் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் அடைந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி இருகின்றன. தலைமையகத்தில் உள்ள அரசு தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு தலைமையகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கிளர்ச்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸ் உள்ளே செல்ல தொடங்கிவிட்டதாகவும் விரைவில் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் எடுப்போம் என்றும் கிளர்ச்சியாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.