பல்லாவரம்: `குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அமைச்சர் அதைக் குடிப்பாரா?’ – அண்ணாமலை கேள்வி

சென்னையில் பல்லாவரம் அடுத்த மலைமேடு பகுதியைச் சேர்ந்த சுமார் 30 பேர் வாந்தி திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் உயிரிழந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால்தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதையடுத்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தா.மோ. அன்பரசன்

மேலும், “குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. உணவில் ஏதோ கலந்திருப்பது போன்று தெரிகிறது. குடிநீரில் எதாவது கலந்திருந்தால் 300 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மக்களுக்கு அக்கறை வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும்.

அண்ணாமலை

இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீதுதான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், தி.மு.க-வினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 – 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55 க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.” என்று எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.