மகளிர் உதவி எண் மைய காலிப் பணியிட விளம்பரத்தில் இந்தி மொழி –அமைச்சர் கீதாஜீவன் கூறும் விளக்கம்

சென்னையில் செயல்பட்டுவரும் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையத்திற்கு காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் தகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தி மொழி இடம்பெற்றது சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிப்புக்குள்ளாகும் மகளிருக்கு உதவிடும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் `மகளிர் உதவி எண் 181′ என்ற பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் `அழைப்பு ஏற்பாளர்’ (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி எனத் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

மகளிர் உதவி எண்

இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அந்த விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம் மற்றும் மத்திய அரசுடனான கடிதத் தொடர்பு போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டம் மற்றும் 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பணிகளை தமிழுக்காக திமுக செய்துள்ளது. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு ஆகும். மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான பல செயல்திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது.

அமைச்சர் கீதாஜீவன்

எனவே, ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. தற்போதைய திமுக ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள்தான் இப்போது கூக்குரல் இடுகின்றனர். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தைச் சிறப்புற தொடர்வோம்.” இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.