ஒரே தொகுதியில் 167 வேட்பாளர்கள்; மும்பை தொகுதிப் பங்கீட்டில் உத்தவ் தாக்கரேயிடம் பணிந்த காங்கிரஸ்!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு வரும் 20ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், காங்கிரஸும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடைசி வரை நீடித்தது. வேட்பு மனுத்தாக்கல் முடியும் நாள் வரை நீடித்த இப்பேச்சுவார்த்தையில் இறுதி வரை உடன்பாடு சுமுகமாக எட்டப்படவில்லை. சில தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. வேட்பு மனுக்களை திரும்ப பெற 4ம் தேதி கடைசி நாளாகும். மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட், அஸ்லாம் ஷேக் ஆகியோர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொகுதி பங்கீட்டில் உத்தவ் தாக்கரே கட்சி மிகவும் பிடிவாதமாக இருந்தது.

வர்ஷா கெய்க்வாட்

குறிப்பாக மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்தது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை உத்தவ் தாக்கரே கொடுக்க மறுத்ததோடு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே உத்தவ் தாக்கரே வேட்பாளர்களை அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மும்பையில் 30 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் இப்போது வெறும் 11 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மிகவும் பலவீனமானது என்றும், அதில் வெற்றி பெறுவது கடினம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 4 தொகுதிகளை சிவசேனாவும் காங்கிரஸும் மாற்றிக்கொண்டன. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி 2 தொகுதியிலும் போட்டியிடுகிறது. இது குறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், ”காங்கிரஸ் 15 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் 11 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. சிவசேனா தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. வர்சோவா மற்றும் பைகுலா தொகுதியில் போட்டியிட விரும்பினோம். ஆனால் கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு, மகாவிகாஷ் அகாடி அதிக தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக எங்களது தொகுதியை குறைத்துக்கொண்டோம்” என்றார்.

பாந்த்ரா மேற்கு தொகுதியில் மறைந்த நடிகர் சுனில் தத் மகள் பிரியா தத்தை நிறுத்த காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பிரியா தத் போட்டியிட மறுத்துவிட்டார். இதே போன்று அந்தேரி தொகுதிக்கு சச்சின் சாவந்த் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். முலுண்ட் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. நான்டெட் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியில் 167 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மகள் போட்டியிடுகிறார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு இத்தொகுதியில் 110 பேர் போட்டியிடுகின்றனர். வரும் 4ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் சிலர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெறக்கூடும் என்று நாண்டெட் மாவட்ட ஆட்சித்தலைவர் அபிஜித் ராவுத் தெரிவித்தார். அப்படி இருந்தாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 9 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்றும், அதனை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அபிஜித் ராவுத் தெரிவித்தார். இதற்கு முன்பு தெலங்கானாவில் ஒரே தொகுதியில் 185 பேர் போட்டியிட்டனர். அதனை ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று அபிஜித் தெரிவித்தார். பீட் தொகுதியிலும் 100க்கும் அதிகமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.