“சீன லைட்டருக்கு தடை வாங்கி தந்தது ஸ்டாலினா?” – துரை வைகோவின் பேச்சுக்கு இராம ஸ்ரீநிவாசன் கண்டனம்

“சீன சிகார் லைட்டர்கள் தடை செய்த விவகாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், அவர் முயற்சியால் தடை பெற்றதுபோன்று துரை வைகோ பேசி வருகிறார். யார் வேண்டுமானாலும் இனிஷியல் போடக்கூடாது…” என்று பா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

தீப்பெட்டி உற்பத்தியாளர் செய்தியாளர் சந்திப்பு

சீன லைட்டர் உதிரிப் பாகங்களை மத்திய அரசு தடை செய்தது தொடர்பாகக் கோவில்பட்டி, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பினர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்தவர்கள் கொல்கத்தா சென்று, அங்குத் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலைக் கற்றுத் தேர்ந்து சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளைத் தொடங்கினார்கள். இந்த தொழில் படிப்படியாக வளர்ந்து தற்போது விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாகவும், பல லட்சம் குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 2,000 கோடிக்குத் தீப்பெட்டிகள் விற்பனையாகின்றன. இதில், 1,700 கோடி உள்நாட்டு விற்பனையாகவும், 300 கோடி ஏற்றுமதியாகவும் இருந்து வருகிறது. 600 கோடி ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லைட்டர்களால் தீப்பெட்டி தொழிலுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

சீன லைட்டர்கள் ரூபாய் ஐந்து மற்றும் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டி விற்பனை முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இதனால் மத்திய தொழில்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டும், வரி உயர்த்தப்பட்டும் ஒரு லைட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இராம ஸ்ரீநிவாசன்

அதன் பின்னர் தீப்பெட்டி தொழில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், சீன லைட்டர்கள் 4,000 கோடி ரூபாய் மதிப்புக்கு உதிரிப் பாகங்களாக நேபாளம் வழியாக இந்தியாவுக்குச் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டு, வட மாநிலங்களில் லைட்டர்கள் பொருத்தப்பட்டு மீண்டும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தீப்பெட்டி தொழிலில் உள்நாட்டு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி இழப்பு ஏற்பட்டது. மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் தீப்பெட்டி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, சீன லைட்டர்கள் மட்டுமின்றி வேறு நாடுகளிலிருந்து லைட்டர்கள் அவற்றின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய முற்றிலும் தடை விதித்தது. இதனால் 8 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை மத்திய அமைச்சர்களிடம் எடுத்துக் கூற ராம ஸ்ரீநிவாசன் உதவி புரிந்தார்” என்றனர்.

தொடர்ந்து இராம ஸ்ரீநிவாசன் பேசும்போது, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கள்ள உறவு என்று பேசினார். இப்போது ஆளுநரும், தி.மு.க.வும் புது காதலர்களாக இணைந்து செயல்படுவதாகச் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். இதுபோன்ற அநாகரீக பேச்சைத் தவிர்க்க வேண்டும். அவரது பேச்சை, ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மற்ற மாநிலங்களில் பெய்தது போன்று சென்னையில் மழை பெய்யவில்லை. இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட, மழை நீர் செல்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பல வருடங்களாக மழைநீர் செல்வதில் பிரச்னை உள்ளது. அதனை யாராலும் சரி செய்ய முடியவில்லை. இதுவரை ஆட்சி செய்த திராவிட கட்சிகளால், வெள்ள நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

இராம ஸ்ரீநிவாசன்

கல்வி, வரி செலுத்துவது உள்ளிட்ட பல விஷயத்திலும் முதல்  இடத்தில் இருக்கிறோம் என தி.மு.க. கூறுகிறது. ஆனால், மழை நீரைக் கடலில் சேர்க்க முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மழை பெய்யாமல் இருக்கிறது. அதற்குக் கடவுளுக்குத்தான் நன்றி செல்ல வேண்டும்.

மதுரையில் மெட்ரோ பணிகளுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்பதில் 2 வகைகள் உள்ளது. ஒன்று மத்திய அரசின் நிதியில் அமைப்பது, மற்றொன்று மாநில அரசின் நிதியில் அமைப்பது. மதுரையில் மெட்ரோ அமைவதற்காக முழு பொறுப்பை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது அதனை மத்திய அரசின் நிதியில் அமைப்பதற்குக் கேட்டுக் கொண்டதன் பேரில், தற்போது மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட இருக்கிறது. அதன்படி, மதுரை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிகார் லைட்டர்கள் தடை செய்த விவகாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், அவர் முயற்சியால் தடை பெற்றதுபோன்று துரை வைகோ பேசி வருகிறார். பெற்றவர்களின் பெயரை மட்டுமே இனிஷியல் போட வேண்டும், யார் பெயரை வேண்டுமானாலும் இனிஷியல் போடக்கூடாது.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs