தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம், தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

இதில், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழவே, கவனக்குறைவாகத் தவறு நடந்துவிட்டதாகவும், தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும் தூர்தர்ஷன் தமிழ் மன்னிப்பு கேட்டது.
இந்த நிலையில், ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம், “சேப்பாக்கத்தில் சென்னை தூர்தர்ஷன் ஏற்பாடு செய்திருந்த, சென்னை தூர்தர்ஷன் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக `திராவிட’ என்ற சொல் வரும் ஒரு வரியைத் தவறவிட்டனர்.
It is hereby clarified that Hon’ble Governor Participated in the
Hindi Month Valedictory function & Commemoration of Doordarshan Chennai Golden Jubilee Celebration held at Chepauk, Chennai organised by Doordarshan, Chennai (1/3)— Thirugnana Sambandam (@Sambandam) October 18, 2024
இந்த விஷயம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இதனை ஆராயுமாறு உரிய அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர் . எனவே, இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துகொண்டதைத் தவிர அவருக்கோ அல்லது ஆளுநர் அலுவலகத்துக்கோ இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை. தமிழ் மற்றும் மாநிலத்தின் உணர்வுகள் மீது ஆளுநர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்” என்று எக்ஸ் தளத்தில் விளக்கமளித்திருக்கிறார்.