மதுரை : மீனாட்சியம்மன் கோயிலில் உற்சாகமாகத் தொடங்கியது நவராத்திரி விழா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

மீனாட்சி சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி வருகிற 12 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவ விழா நடைபெறுகிறது. இதையொட்டி சாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.

கொலு மண்டபத்தில் சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் காட்சிகள், சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளைத் தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் கதைகள் இடம்பெற்றுள்ளன.

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சியம்மன்

அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். கைகளில் கரும்பு, தாமரை மலர் ஏந்தி காட்சியளித்த மீனாட்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மீனாட்சியம்மனுக்கு முன்பு அலங்கார தொட்டியில் விநாயகர் உருவில் நீர்க்கோலம் வரையப்பட்டு இருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவையொட்டி 12 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம்,அலங்காரம் நடந்து கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.