Chennai: அண்ணா சாலையில் சீறிப்பாய்ந்து விபத்தை ஏற்படுத்திய BMW; ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய மக்கள்!

சென்னை அண்ணா சாலையில் BMW சொகுசு கார் ஒன்று அண்ணா மேம்பாலத்திலிருந்து எல்.ஐ.சி நோக்கி பிற்பகல் 12 மணி அளவில் அதிவேகத்தில் வந்துள்ளது. அண்ணா மேம்பாலத்திலிருந்து இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது சரமாரியாக மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நூலிழையில் கட் எடுத்து நிற்காமல் சென்றிருக்கிறது. இதில் ஆட்டோ, சரக்கு வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தது.

அண்ணா சாலை விபத்து

அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை பிரிவில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவல்துறையினர், வாகனங்களை சேதப்படுத்திவிட்டு சீறி வந்த சொகுசு காரை இடைமறிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த சொகுசு கார் நிற்காமல் சீறிப்பாய்ந்து அங்கிருந்து தப்பிக்க முயன்றது. சீறி வரும் காரின் வேகத்தை முன்கூட்டியே கவனத்துடன் பார்த்துவிட்ட பொதுமக்கள், முன்னெச்சரிக்கையுடன் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

ஆயிரம் விளக்கு போக்குவரத்து காவல் நிலையத்தின் அருகே பொதுமக்களும், போக்குவரத்துக் காவல்துறையினரும் தப்ப முயன்ற அந்த சொகுசு காரை மடைக்கிப் பிடித்தனர். இதையடுத்து இந்த விபத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களும், ஆத்திரமடைந்த பொதுமக்களும் கட்டுப்பாடின்றி காரை ஓட்டிவிட்டு, தப்ப முயன்ற ஓட்டுநரை ஆத்திரத்தில் சரமாரியாகத் தாக்கி, காரையும் அடித்து நொறுக்கினர்.

விபத்தை ஏற்படுத்திய ஒட்டுநர், பாதிக்கப்பட்ட நபர்

தாக்குதலால் காயமடைந்த சொகுசு காரின் ஓட்டுநர், ‘பத்து நாள்களாகத் தூக்கமில்லை. தூங்காமல் தொடர்ந்து கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் இப்படி விபத்து நடந்துவிட்டது. என்னையும் இப்படித் தாக்கி, என் காரையும் அடித்து நொறுக்கிவிட்டீர்கள். இந்த காரை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் தெரியுமா?’ என்று கதறி அழுதார்.

இந்த விபத்தால் சேதமைடைந்த வாகனத்தின் உரிமையாளர் ஒருவர் விபத்து பற்றி கூறுகையில், `கடன் வாங்கி, மாதந்தோறும் ‘EMI’ கட்டிகொண்டு இருக்கும் என் வாகனம் சேதமடைந்துவிட்டது. என்னைப்போல பலரும் கஷ்டப்பட்டு, கடனில் வாகனங்கள் வாங்கி குடும்பத்திற்காக உழைக்க சாலையில் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், சிலர் வேகதத்தை டெஸ்ட் செய்யவும், ஜாலியாக அதிவேகத்துடன் வாகனங்களை ஓட்டிப் பார்க்கவும் ஆசைப்பட்டு பொதுமக்கள் செல்லும் சாலையில் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். விதிமீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதனாலேயே இங்கு அதிக விபத்துகள் நடக்கின்றன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவேசத்துடன் தனது குமுறல்களை வெளிப்படுத்தினார், பாதிக்கப்பட்ட அந்த நபர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.