`எங்க நகைகளை விற்று இறுதிச் சடங்கு நடத்திடுங்க’ – கடிதம் எழுதிவிட்டு மூவர் தற்கொலை; திருப்பூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் முத்தீஸ்வரி. திருப்பூரில் தொழில் செய்துவரும் நாகசுரேஷ் கடந்த ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்துள்ளது. இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், நாகசுரேஷ். அவர் மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் முத்தீஸ்வரி ஆகிய மூவரின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், “தனது உறவினர் சூர்யமூர்த்தி மூலம் ரூ.5 லட்சம் கொடுத்து இந்த வீட்டை போக்கியத்துக்கு நாகசுரேஷ் பிடித்துள்ளார். மேலும், சூரியமூர்த்திக்கு தனியாக ரூ. 5 லட்சம் கடனும் கொடுத்துள்ளார் நாகசுரேஷ். இந்நிலையில், கடந்த வாரம் சூரியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழப்பு

சூரியமூர்த்தி மனைவியிடம் தான் கடனாக கொடுத்த பணத்தை நாகசுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. சூரியமூர்த்தி இறந்து விட்டதால் கொடுத்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சூரியமூர்த்தியின் மனைவி தெரிவித்துள்ளார். வீடு போக்கியத்துக்கு கொடுத்ததற்கு சூர்யமூர்த்திதான் சாட்சி, தற்போது கடனாக கொடுத்த பணமும் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் நாகசுரேஷ் இருந்துள்ளார். இந்த மனஉளைச்சலால் நாகசுரேஷ் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், `நாங்கள் அணிந்துள்ள நகையை விற்று எங்களது இறுதிச்சடங்கை செய்து விடுங்கள்’ என உருக்கமாக எழுதி வைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.