“ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன்” – சீமான்

“ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தது போல, கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுக்குமா?” என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

சீமான்

மதுரை வந்திருந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஜனநாயக நாட்டில் கருத்தை பதிவு செய்யக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. ஜி.எஸ்.டியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார், நேரில் வரவழைத்து மிரட்டப்பட்டு உள்ளார், தொழில் அதிபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என அண்ணாமலை மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்.

பாஜக, கச்சத்தீவை மீட்கவில்லை ஏன்?

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திராகாந்தி தான் என்பது எல்லோருக்கும் தெரியும், அதற்கு பின்னர் எந்த பிரதமரும் பதவிக்கு வரவில்லையா? இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய பிரதமர்கள் பல கோடிகளை வட்டியில்லா கடனாக கொட்டி கொடுத்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. இலங்கையிடம் இந்தியா கைகட்டி நிற்பது எவ்வளவு கேவலம்?

சீமான்

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதே குஜராத் உள்ளிட்ட மற்ற மாநில மீனவர்கள் என்றால் மத்திய அரசு சும்மா விட்டு விடுமா?

குஜராத், பீகாரில் வெள்ளம் என்றால் ஒடோடி வரும் மத்திய அரசு, தமிழகத்தில் வெள்ளம் என்றால் எட்டி கூட பார்ப்பதில்லை. பகை நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் மீனவர்களை கைது மட்டுமே செய்கிறது, இலங்கை 850 மீனவர்களை கொன்று குவித்துள்ளது. இந்தியாவின் மீது பயமில்லாத காரணத்தால் இலங்கை மீனவர்களை கொல்கிறது. கொஞ்சம் காத்திருங்கள், மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு கட்டுகிறோம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு…

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன், 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே? ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின் வாங்காமல் இருக்க வேண்டும்.

மதுவை ஒழிப்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை, மது ஒழிப்பு மாநாட்டுக்கு பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை திருமாவளவன் அழைக்கவில்லை, எதிர்வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேர வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவையும் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல திமுக கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்குமா? கலைஞர் குடும்பத்தில்தான் துணை முதல்வர்கள் இருப்பார்களா? நாட்டில் வேறு யாரும் துணை முதல்வர் ஆகக்கூடாதா? இவர்கள் வீட்டில் இருந்துதான் துணை முதல்வராக வருவார்களா? இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும்.

திருமாவளவன்

தமிழகத்தில் முதலீடு…

விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு நாள்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநாட்டுக்கு அனுமதி பெற கால அவகாசம் வேண்டும், புதிதாக கட்சி தொடங்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது, விஜய் அரசியலுக்கு புதிது, நான் கட்சி துவங்கியபோது பல இன்னல்களை சந்தித்தேன், விஜய் தற்போது தான் கட்சி துவங்கி உள்ளார், அவர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை, தமிழகத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறியது, 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்ய போகிறது? ஜெயலலிதா காலத்திலிருந்தே முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது, அப்புறம் ஏன் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை, 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக சொல்கிறார்கள். மூவாயிரம் பேருக்கு வேலை கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? தமிழர்களின் உழைப்பை சுருண்ட தமிழகத்தில் முதலீடு செய்கிறார்கள். இதில் உள்ள மோசடியை மக்கள் உணர வேண்டும்” என கூறினார்.