`திருப்பூர் பிரகடனம்; பாஜக-வின் 500 நாள் திட்டம்..!’ – நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?!

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை படிப்பு தொடர்பாக செப்டம்பர் மாதம் லண்டன் செல்லவுள்ள நிலையில், யார் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரத்குமார், மாநிலப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் என தனித்தனியாக நடத்தப்பட்டு பின்னர் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில், பேசிய அண்ணாமலை, “அடுத்த 500 நாள்கள் நமக்கு மிக முக்கியமான நாள்களாகும். 500 நாள்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆலோசித்து திட்டமிட வேண்டும். இந்த திருப்பூர் கூட்டத்தின் மூலம் “திருப்பூர் பிரகடனம்” அறிவிக்கப்படுகிறது. இந்த திருப்பூர் பிரகடனம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.

அண்ணாமலை

இந்தக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து பா.ஜ.க.நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அண்ணாமலைக்குப் பதிலாக யாருக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பு யாருக்கென்று கட்சியின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று முடித்துக் கொண்டார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பல மாவட்டத் தலைவர்கள் தங்கள் சொந்த வார்டிலேயே சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகள் பெறவில்லை. அந்த மாவட்டத் தலைவர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது. தொடர்ந்து பேசிய தலைவர்களும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கட்சியை அடிப்படையில் இருந்து பலப்படுத்துவது குறித்தும் விரிவாக பேசினர்.

நிர்வாகிகள் கூட்டம்

இதைத் தொடர்ந்து `தமிழகத்தை மீட்போம்; தளராது உழைப்போம்’ என்ற `திருப்பூர் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்றுவதும், பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதும்தான் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவோம். இதை சவாலாக எடுத்துக் கொள்ளாமல் சாதனையாக செய்து முடிப்போம் என ஒவ்வொரு நிர்வாகிகளும் உறுதி எடுத்துக் கொண்டனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகளை மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாகவே அண்ணாமலையின் பேச்சு இருந்தது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88