“69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து..!” – பாமக கே.பாலு சொல்லும் விளக்கம்

“தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கிட்டுக்கு ஆபத்து எனப் பேசி பதற்றதை உருவாக்க முற்படுகிறீர்களா… பா.ம.க-வின் இக்கருத்தை கற்பனைவாதம் என்கிறதே தி.மு.க?!”

“தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ` 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டிய நிர்பந்தம் என்ன? என கேள்வியை எழுப்பியது நீதிமன்றம், அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. 2020-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் மீண்டும் விசாரணைக்கு வருகிறபோதும் மீண்டும் அவகாசம் கோரப்பட்டு `69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைத்தார் எடப்பாடி பழனிசாமி’.

ஆனால் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்குபிறகு இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இருந்தால் தமிழ்நாடு அரசு எதைவைத்து 69% இட ஒதுக்கீட்டின் தேவையை எடுத்துக்கூறும்? எனவே 69% இடஒதுக்கீட்டை காப்பதற்கும், உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்துவது மிக மிக அவசியம். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பிரமாண பத்திரத்தில் `மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிடவில்லை என்பதையும் நினைவு கூறுகிறேன். ”

ஸ்டாலின்

“பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் பா.ம.க, மத்திய அரசை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தாமல் தி.மு.க-வை சாடுவதேன்?”

`மத்திய அரசு நடந்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான வலியுறுத்தல்களை செய்கிறோம். அதேசமயம் மாநில அரசுக்கும் அந்த அதிகாரமிருக்கிறது. அதை தட்டிக்கழிப்பது ஏற்புடையதல்ல.”

“பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததே பா.ம.க-வின் தொடர் பின்னடைவுக்கு காரணம் என்கிறார்களே… இக்கருத்தை பரீசிலிக்கிறதா பா.ம.க?”

ராமதாஸ், மோடி

“அப்படியில்லை, கடந்த தேர்தலை பொறுத்தவரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி முடிவை எடுத்திருக்கிறோம். வருங்காலத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து மருத்துவர் ஐயா-வும் அன்புமணி ராமதாஸும் உயர்மட்ட குழுவோடு ஆலோசித்து நல்ல முடிவெடுப்பார்கள் அந்த கூட்டணி தி.மு.க-வை வீழ்த்தும் வகையில் அமையும், இதற்குமேல் கூட்டணி விவகாரத்தில் பதிலளிக்கும் இடத்தில் நானில்லை.”

`தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீட்டை அங்கீகரித்திருக்கிறதே உச்ச நீதிமன்றம்.. பா.ம.க-வின் நிலைப்பாடென்ன?”

பாலு

“இத்தீர்ப்பை வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது இதுபோன்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டில் பல சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையென்ற கோரிக்கை எழுந்திருக்கும் சூழலில் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு இத்தீர்ப்பு பேருதவியாக இருக்கும். ஆனால் கிரீமிலேயர் கொண்டு வருவதற்கான பரிந்துரை தேவையற்றதென கருதுகிறோம்.”

“25 எம்.பிக்கள் கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகமும் இடம்பெற்றிருக்கும் என்ற அன்புமணியின் கருத்து கடும் சர்ச்சையாகியிருக்கிறதே.. அவரது பேச்சை நீங்கள் ஏற்கிறீர்களா?”

அன்புமணி ராமதாஸ்

(கோபத்துடன்) “இதுபோன்ற அவசியமில்லாத கேள்விகளை தவிருங்கள். அன்புமணி ராமதாஸிடம் எந்த தருணத்தில் கேள்வி எழுப்பப்பட்டது, எந்த பதத்தில் அவர் பதிலளித்தார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே கேள்வியை திருப்பி திருப்பி கேட்டபோது சாதரணமாக ‘ஜெயிக்க வைத்திருந்தால் கொடுத்திருப்பார்களே’ என கடந்துதான் சென்றார். பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸின் கருத்தே `மாநிலத்தின் பெயர் இல்லையென்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை என அர்த்தமில்லை. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு இன்னும் அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்` என்பதுதான். அதை புரிந்துகொள்ளாமல் தவறான கருத்துருவாக்கம் செய்யாதீர்கள்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88