`எடப்பாடியை பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டது எப்படி?’ – சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?

ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ.பன்னீர்செல்வம் என்றும், `இணை ஒருங்கிணைப்பாளர்’ எடப்பாடி கே.பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அ.தி.மு.க பொதுக்குழு

இந்த மூல வழக்கில் இரு தரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26-ம் தேதி வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை `இணை ஒருங்கிணைப்பாளர்’ என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது `அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ எனக் கூறி பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்” என லீகலாக ஒரு பாயின்ட்டை முன்வைத்தனர்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அந்தக் கட்சியின் `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்?” என பழனிசாமி தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி தரப்பில், பொதுக்குழு, பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துரைத்தனர். மேலும், திருத்தப்பட்ட மனுவைத் தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்

அதற்குள், ‘எடப்பாடி பழனிசாமியை `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டது எப்படி?’ என்ற நீதிமன்றத்தின் கருத்து, அதிமுக-வுக்குள் சர்ச்சையைப் பற்றவைத்திருக்கிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்பதுரை, “அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்டு, செயல்பட்டுவருகிறார். `இந்தப் பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது’, `கூட்டிய பொதுக்குழு செல்லாது’, `பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது’ என்று மூன்று வழக்குகளைத் தனி நீதிபதி, டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் என மூன்று வகையான நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்து தோல்வியடைந்தார்கள்.

அதன்படி, `அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, தேர்தல் ஆணையமும் அங்கிகரித்திருக்கிறது.

முன்னதாக, ஓ.பி.எஸ்., தான்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற வழக்கு ஒன்றில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கு, `அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்ற பெயரில் பதில் மனு தாக்கல் செய்தோம். ஆனால், மெயின் ரிட் மனுவில் `ஒருங்கிணைப்பாளர்’, `இணை ஒருங்கிணைப்பாளர்’ என்று இருப்பதாக எதிர்த் தரப்பு ஒரு டெக்னிக்கல் தகவலை எடுத்துவைத்தது. அப்போதுதான், `எதற்காக இப்படித் தாக்கல் செய்தீர்கள்?’ என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்டது.

இன்பதுரை

அப்போது நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். அதாவது, இந்த வழக்கு தொடரப்பட்டதுபோது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியார், தற்போது பொதுச்செயலாளராகிவிட்டார். இது தொடர்பாக 23.2.2023 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், `ஒருங்கிணைபாளர்’, `இணை ஒருங்கிணைப்பாளர்’ என்று அழைப்பது அவசியமில்லை என்று 34-ம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதன்படிதான், பதில் மனு தாக்கல் செய்தோம். இதற்கு, ‘மூல வழக்கில் குறிப்பிட்டதுபோல, `ஒருங்கிணைப்பாளர்’, `இணை ஒருங்கிணைப்பாளர்’ என்று போடுவதில் என்ன பிரச்னை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி

அதற்கு, ‘ அப்படிப் போட்டால், அவரை ஒருங்கிணைப்பாளர் என்று நாங்கள் ஒப்புக்கொள்வதுபோல ஆகிவிடும். இருப்பினும், நீதிமன்றம் சொன்னால் அப்படிச் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று வாதிட்டோம். வாதி, பிரதிவாதிகளின் பெயர் பொறுப்புகளில் மாற்றம் வரும்போது ‘ Amendment of cause title’ அடிப்படையில், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றலாம். அதற்கான மனுவைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, மனுவைத் தாக்கல் செய்வதாகச் சொன்னோம். அதை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதான் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தவறான தகவலைப் பரப்பிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். பதவி இழந்த சப்- இன்ஸ்பெக்டரை எப்படி சப்- இன்ஸ்பெக்டர் என்று அழைக்க முடியாதோ, அதேபோல, ஓ.பி.எஸ்-ஸை ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்க முடியாது” என்றார் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88