NEET: `இங்கு தாலியை கழட்டி சோதனை செய்கிறீர்கள்; ஆனால்?’ – மத்திய அரசு வழக்கறிஞரிடம் காட்டமான நீதிபதி

“வருகின்ற திங்கள் கிழமை தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தோம்.

“கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற சென்னையை சேர்ந்த மாணவர்கள், தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த சம்பவம், வெளியே தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை உயர் நீதிமன்றம்

பின்னர், விசாரணையின்போது பல மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம் தெரியவந்ததால் இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து, சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்ற மாணவரை முதல் குற்றவாளியாக சேர்த்து, இன்னும் சில மாணவர்கள், பெற்றோர்கள், புரோக்கர்கள்  என  27 பேர்களை குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்கும்படி சென்னையைச் சேர்ந்த தருன்மோகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, “நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை, இதனால் வழக்கு விசாரணை தொய்வாகவே உள்ளது” என தெரிவித்தார்.

நீட் தேர்வு

தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ‘அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கோரினார்.

இதனைக்கேட்டு கோபமடைந்த நீதிபதி, “வழக்கு பதிவு செய்து ஐந்து வருடம் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால்கூட அந்த தாலியை கழட்டச் சொல்லி சோதனை செய்கிறீர்கள்.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி கேட்ட தகவலை நீட் தேர்வு நடத்துபவர்கள் இதுவரை வழங்கவில்லை. இதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவதுபோல தெரிகிறது.

நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர், இறுதியாக, திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாக கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88