ரஷ்யாவில் மோடி… மணிப்பூருக்கு அழைக்கும் ராகுல் காந்தி..! – காரணம் என்ன?

மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கும், மேதி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஓராண்டு காலம் ஆன பிறகும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி – மணிப்பூர்

ஆனால், இன்றுவரை மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு மக்கள் கதறிக்கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், எம்.பி-யாகவும் அங்கு ராகுல் காந்தி சென்றார்.

அதன் பிறகு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரிலிருந்து தொடங்கினார் ராகுல் காந்தி. இப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரானவுடன், மீண்டும் மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார் ராகுல் காந்தி.

மணிப்பூர் கலவரம்

டபுள் இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த நிலையில், குக்கி பழங்குடி மக்கள் வசிக்கும் மலை மாவட்டங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலிக்கிறது.

இந்தச் சூழலில்தான், ராகுல் காந்தி அங்கு சென்றார். ஜிரிபாம், பிஷ்னுபூர், சுரசந்த்பூரில் உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாம்களைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, அங்கு தங்கியிருக்கும் மக்களுடன் கலந்துரையாடினார்.

மணிப்பூர் வன்முறை

ராகுல் காந்தியின் வருகை தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், தங்களின் பிரச்னைகள் இதன் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்துக்குச் செல்லும் என்றும் அந்த மக்கள் கூறியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்களைச் சந்தித்த பிறகு, மணிப்பூர் ஆளுநர் அனுசியாவையும் ராகுல் காந்தி சந்தத்துப் பேசினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். இங்கு, வன்முறையால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மாநிலம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. உங்கள் சகோதரனாக இங்கு வந்திருக்கிறேன் என்பதை மணிப்பூரில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு என்னால் என்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் நிச்சயம் செய்வேன். இங்கு, அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்’ என்றார்.

மணிப்பூர்

மணிப்பூர் பயணத்துக்கு இடையே அஸ்ஸாமுக்கும் அவர் சென்றார். கச்சார் மாவட்டத்தில் ஃபுலேர்தால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வெள்ள நிவாரண முகாமை ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்துப் பேசினார். ‘அஸ்ஸாம் மக்களுடன் நான் தோளோடு தோள் நிற்கிறேன்’ என்று அவர் கூறினார்.

மணிப்பூரிலும், அஸ்ஸாமிலும் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறிய வேளையில், பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருக்கிறார். இந்தியா – ரஷ்யா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக மோடி சென்றிருக்கிறார். தலைநகர் மாஸ்கோவில் இந்தியா வம்சாவளியினருடன் அவர் கலந்துரையாடினார்.

மோடி – புதின்

இந்த நிலையில், ‘சொந்த நாட்டில் இன ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பிரச்னைக்குத் தீர்வுகாண பிரதமர் மோடி முயற்சி செய்யவில்லை. மாறாக, வெளிநாடுகளுக்கு செல்வதிலேயே அவர் ஆர்வம் காட்டுகிறார். உள்நாட்டு மக்களின் துயரங்களுக்குத் தீர்வுகாணாமல், வெளிநாட்டுக்குச் சென்று அங்குள்ள இந்தியா வம்சாவளியினருடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டும் பிரதமராக இருக்கிறார்’ என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb