`குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே ஆறு பேரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகிவிட்டதாக தி.மு.க அரசை எதிர்க்கட்சிகள் சாடின.

Armstrong: ஆம்ஸ்ட்ராங் – மாயாவதி

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பெரம்பூரில் ஒரு பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களின் இறுதியஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக இடத்தில் நல்லடக்கம் செய்ய அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தபோதும் அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படாததால், பொத்தூரில் அவர்களின் உறவினருக்கு சொந்தமான இடத்தில புத்த மத முறைப்படி ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னொருபக்கம், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோரை பணியிடம் மாற்றி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த அருண் என்பவரை சென்னை காவல் ஆணையராக மாநில உள்துறை நியமித்தது.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றிருக்கிறார். அதோடு, ஆம்ஸ்ட்ராங்கின் படத்துக்கு மலர் தூவி, அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றாவளிகள் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.