சுட்டிக்காட்டிய ஜூ.வி; பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொன்னி அம்மாள் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 250 பேர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இ.புதுப்பாளையம், துத்திப்பாளையம், நாயக்கன் வலவு, மயில்புறாகாடு, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், மாவெளிபாளையம், ஒழுகுபாறை, சங்ககிரி கெமிக்கல் பிரிவு போன்ற பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்குப் பேருந்து இல்லாமலும், அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக பஸ் பாஸ் வழங்காமலும் இருந்தது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு ஜூ.வி தகவலைக் கொண்டு சென்றது.

பிருந்தா தேவி

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசி, பள்ளிக்குழந்தைகளுக்கு உடனடியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டார்.

அது தொடர்பாக, விகடன் இணைய தளத்தில் ‘சேலம்: 2 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்; பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த மாவட்ட ஆட்சியர்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நேரத்திற்குப் பேருந்து அனுப்புவது குறித்து ஆலோசித்து, நேற்று காலை துத்துப்பாளையம், நாயக்கன் வலவு, இ.புதுப்பாளையம், மயில்புறாகாடு பகுதிக்குப் பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர். அதன்மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.