சாதிவாரி கணக்கெடுப்பு: அதிகரிக்கும் அழுத்தம் – என்ன செய்யப்போகிறது மோடி அரசு?!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. எஸ்.சி., எஸ்.சி., ஓ.பி.சி., இ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. அதிலிருந்து, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும என்ற குரல் பல மாநிலங்களில் எழுந்தது.

நிதிஷ் குமார்

தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க மட்டுமின்றி, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தளவில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கியது.

ஸ்டாலின்

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதுடன், தற்போது 50 சதவிகிதமாக இருக்கும் இடஒதுக்கீடு உச்சவரம்பு அதிகரிக்கப்படும்’ என்று மக்களவைத் தேர்தலின்போது ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். இந்த நிலையில், ‘சாதியின் பெயரால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன’ என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று நேரடியாக அவர் சொல்லவில்லை. ஏனெனில், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஓ.பி.சி சமூக மக்களிடமிருந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்துவருகிறது. அதற்கான போராட்டங்களும் பல மாநிலங்களில் நடைபெற்றிருக்கின்றன.

அமித் ஷா

இந்த நிலையில்தான், ‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க ஒருபோதும் இருந்ததில்லை. இதில் நாங்கள் வாக்கு அரசியல் செய்யவில்லை. கவனமாக யோசித்து, உரிய நேரத்தில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தற்போது மூன்றாவது முறையாக மோடி பிரதமராகியிருக்கும் நிலையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்’ என்று மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். கடைசியாக, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2020-ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவில்லை.

பிரதமர் மோடி

எனவே, இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் மத்திய அரசு நடத்த வேண்டும். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தியாக வேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமில்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடமிருந்தும் வருகிறது.

பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

பீகாரில் நிதிஷ் குமார் அரசால் அதிகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்துசெய்தது. ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இப்போது அர்த்தமில்லாமல் போய்விட்டது.

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கும். எனவே, அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கலாம். ஆனால், அதே கோரிக்கையை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தும்போது, அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. இதில் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88