Lok Sabha Election 2024: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான்; உடனே எதிர்வினையாற்றிய சீனா!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் (Lok Sabha Election 2024), பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. எனவே, மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகவிருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதில், சீனாவிடமிருந்து தனித்து இயங்க முயலும் தைவான் அதிபர் லாய் சிங்-தேவும் ஒருவர்.

மோடி – சீனா வரைபடம்

அவரின் எக்ஸ் பக்கத்தில், “வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்தோ பசிபிக் அமைதி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,“அருமையான செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் இன்னும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இந்தியாவில் இருக்கும் சீன தூதரக அலுவலக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election 2024) வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள், தைவானுடனான உத்தியோகபூர்வ தொடர்பு கொண்டிருப்பதை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது.

சீனா அதிபர் – பிரதமர் மோடி

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே இருக்கிறது. ஒரே சீனா கொள்கையில் இந்தியா தீவிர அரசியல் ஈடுபாடுகளை கொண்டிருக்கிறது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரே சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சீனக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் தைவான், கம்யூனிஸ்ட் சீனாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.