அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த நபரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுகையில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் மாதாங்கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார்(வயது 28), பி.டெக். பட்டதாரி. கடந்த 2019-ம் ஆண்டு இவர், சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பிரபுக்கண்ணன் என்பவரை சந்தித்து அறிமுகமாகியுள்ளார். அப்போது பேசிய பிரபுக்கண்ணன், சென்னையை சேர்ந்த தன் நண்பர் ஐயப்பன் மூலமாக உதவியாளர் பணிக்கு பணம்கொடுத்து அரசுத்துறையில் சேர்ந்ததாக கூறியிருக்கிறார். மேலும், சென்னையில் வசிக்கும் ஐயப்பன், அவரின் மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமார் ஆகியோருக்கு அரசுத்துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது. அந்த பழக்கவழக்கத்தை பயன்படுத்தி அவர்கள் மூலமாக எளிதில் அரசுவேலை வாங்கிவிடலாம் எனவும் கூறியிருக்கிறார். இதை நம்பிய கார்த்திக் குமார், தனக்கும் ஐயப்பன் மூலமாக அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டதாக தெரிகிறது.

மோசடி

இதைத்தொடர்பாக, சிவகாசி சித்துராஜபுரத்தில் உள்ள ஐயப்பனின் வீட்டில்வைத்து பேசுகையில், ரூ.20 லட்சம் கொடுத்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணி வாங்கித்தருவதாக கார்த்திக் குமாருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அவரும், ஐயப்பன் சொன்னபடியெல்லாம் நடந்துகொண்டுள்ளார்.

மின்வாரிய உதவிப்பொறியாளர் பணிக்கு தேர்வு எனச்சொல்லி கார்த்திக் குமாரை சென்னைக்கு வரவழைத்து தேர்வெழுதவும் செய்திருக்கின்றனர். அரசு பணிநியமன ஆணை பெறவேண்டுமென்றால், பேசியப்படி பணம் கொடுக்கவேண்டும் என பிரபுக்கண்ணன் கூறியதைக் தொடர்ந்து, ஐயப்பனின் மனைவி மாலாவிடம் இரண்டு தவணைகளாக ரூ.14 லட்சம் பணத்தை கார்த்திக் குமார் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை பணிநியமன ஆணை கிடைத்த பின்பு தருகிறேன் என சொன்னதாக கூறப்படுகிறது.

கைது

அப்போது கார்த்திக் குமாரின் கல்விச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட ஐயப்பனின் குடும்பத்தினர், மீதிப்பணத்தை கொடுத்தால் மட்டுமே பணிநியமன ஆணை வழங்கமுடியும் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்தும் வாக்குறுதி அளித்தபடி, பணிநியமன ஆணை வழங்காமல் இழுத்தடித்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த கார்த்திக் குமார், தான் கொடுத்தப் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பித்தராமல் காலம்கடத்தி வந்ததையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், பிரபுக்கண்ணன், ஐயப்பன், மாலா, விஷ்ணு, அருண்குமார் ஆகிய 5 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பனை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.