உத்தரப்பிரதேச மாநிலம் அகோதி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததும், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவர் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், சிறுமியின் தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏறப்டுத்தியிருக்கிறது. மேலும், கிராம மக்கள் காவல்துறைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஜலான் ஏஎஸ்பி அசீம் சவுத்ரி, “2 மாதங்களுக்கு முன்பு அகோதி கிராமத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வந்திருக்கிறது.
போலீஸார் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. 24 மணி நேரத்தில் அறிக்கை கிடைக்கும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீதும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.