குஜராத் மாநிலம் சூரத், அம்ரோலி காவல் நிலையத்தில் கள்ள நோட்டு தொடர்பாக ஒரு வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் மாநில போலீஸார், தமிழகத்தில் கள்ள நோட்டுக்கள் பிரின்ட் செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். உடனடியாக இதுகுறித்து தமிழக டிஜிபி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குஜராத் மாநில போலீஸார் தமிழகத்துக்கு வந்தனர். இதையடுத்து குஜராத் மாநில போலீஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் கள்ள நோட்டு கும்பலைப் பிடிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது, கொடுங்கையூரைச் சேர்ந்த சூர்யா (36) என்பவரை போலீஸார், கள்ள நோட்டு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இவரின் சகோதரி வீடு மணலியில் உள்ளது. அங்கு வைத்துதான் கள்ள நோட்டுக்களை பிரின்ட் செய்திருக்கிறார்கள். பின்னர், கள்ள நோட்டுக்களை குஜராத் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சப்ளை செய்திருக்கிறது இந்தக் கும்பல். மணலியில் உள்ள வீட்டிலிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டுக்களை பிரிண்ட் செய்ய பயன்படுத்திய இரண்டு பிரின்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு வழக்கு தொடர்பாக சூர்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்