“எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்” – திருமாவளவன் கருத்து

எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜகவை தூக்கி பிடிக்காமல் தமிழர்கள் மற்றும் அதிமுகவினரின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ பன்னீர்செல்வமா என்று வருகிறபோது, எடப்பாடி பழனிசாமியை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. சட்ட பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ளார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், இதில் பாஜக மற்றும் சங்பரிவாரின் ஆதரவு பின்னணியில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

image

தற்போது அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள் ஒன்று தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர், சமூக நீதியை பாதுகாத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக நீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமப்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற துரோகமாகும்.

image

எனவே இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த முன் வர வேண்டும். இதனை நானும் ஒரு சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் இருப்பவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கணமும் பாதிக்கப்படும், மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

image

மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இணைவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிய அவர், அது அவர்களது உட்கட்சி பிரச்னை. எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனையும் படிக்கலாமே.. “செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி…”- திருமாவளவன் பதில்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM