சேலத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியிலேயே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

image

இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் ஓரிரண்டு நாட்களில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், சேலம் ஓமலூர் பிரதான சாலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். அவசர வேலைக்காக சென்றவர்கள் சாலை தடுப்புச் சுவர்களை தாண்டி மாற்று பாதையில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடனடியாக அவர்கள் கலைந்து செல்லாததால் அரைமணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

image

இதனையடுத்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடை திறக்கப்பட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.