கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கான நான்கு சதவிகித ஓ.பி.சி இட ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டு, அது வீரசைவ-லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும், ஓ.பி.சி முஸ்லிம்களை 10 சதவிகித பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுக்கு (EWS) மாற்றவும் முடிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘கரோட்டா ஷஹீத் ஸ்மாரக்’, சர்தார் வல்லபாய் படேலின் நினைவிடத்தை திறந்துவைத்து,103 அடி உயர தேசியக்கொடியையும் ஏற்றினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சிறுபான்மையினருக்கு அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. காங்கிரஸ் அரசு அதன் அரசியல் லாபங்களுக்காக சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. பா.ஜ.க அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு வொக்கலிகா, லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. காங்கிரஸின் அரசியலால், வாக்கு வங்கியின் பேராசையால், ஹைதராபாத் முக்திக்காக (விடுதலை) உயிர்த் தியாகம் செய்த மக்களை ஒருபோதும் நினைவுகூரவில்லை.
இந்த கோரட்டா கிராமத்தில் 2.5 அடி உயர மூவர்ணக்கொடியை ஏற்றியதற்காக, ஒரு கொடூரமான நிஜாமின் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இன்று அதே நிலத்தில், 103 அடி உயர மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கிறோம் என்று பெருமையுடன் கூறுகிறேன். மேலும், அந்த அழியா தியாகிகளின் நினைவிடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 20 அடி உயர சர்தார் படேலின் சிலை, ஹைதராபாத்திலிருந்து நிஜாமை விரட்டியதில் குறிப்பிடத்தக்க பங்கின் சின்னம். அதனால் இந்தப் பகுதி இந்தியாவின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறக்கூடும்” என்றார்.