ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணமாக ஊர்வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையானதாக இருக்கும் என்பது பல பதிவுகள் மூலம் நாமே அறிய முடியும். அந்த வகையில், அண்மையில் நடந்த சம்பவம்தான் சற்று தலையை கிறுகிறுக்கச் செய்யும் அளவுக்கு அமைந்திருக்கிறது.
பொதுவாக படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் ஊர்வது போன்ற உணர்வு பலருக்குமே வந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள இந்த பெண்ணுக்கு நிஜத்திலேயே அப்படியான பகீர் சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் கொடூரமான விஷம் கொண்ட பாம்பினால் என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!
குயின்ஸ்லேண்டில் உள்ள ஸக்கரி ரிச்சர்ட்ஸ் என்பவர் பாம்பு உள்ளிட்ட ஊர்வனங்களை இடமாற்றம் செய்துவருவதை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கடந்த மார்ச் 20ம் தேதி மரூன் என்ற டவுனில் இருந்து பெண்ணொருவர் ஃபோன் செய்து, தனது வீட்டின் அறைக்குள் 6 அடி நீளத்துக்கு பாம்பு ஊர்ந்துக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து உடனே அங்கு விரைந்த ஸக்கரி மற்றும் குழுவினர், அழைப்பு வந்த பெண்ணின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு படுக்கையில் 6 அடி நீளம் கொண்ட கிழக்கு பழுப்பு நிற பாம்பு இருந்ததை கண்டிருக்கிறார்கள். மேலும் அறையின் கதவை தாழிட்டதோடு, பாம்பு வெளியேறாமல் இருக்க அதன் கீழே ஒரு டவலையும் போட்டு மறைத்திருந்ததையும் பார்த்திருக்கிறார்கள். அந்த ஏற்பாடுகளை அப்பெண்தான் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வெளியே நிலவும் வெப்ப நிலையில் இருந்து தப்பிக்கவே வீட்டின் நுழைவு வாயில் வழியாக அந்த பாம்பு தஞ்சம் புகுந்திருக்கலாம் என கூறியிருக்கிறார் ஸக்கரி. மேலும், “எங்காவது பாம்பை கண்டால் அந்த இடத்திலிருந்து நீங்கள் முதலில் வெளியேறி விடுங்கள். உங்களை பாதுகாப்பான இடத்துக்குள் இருக்கச் செய்யுங்கள். குறிப்பாக அந்த பாம்பை ஒரு எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் இருக்கும் அளவுக்கான ஏற்பாடை செய்யுங்கள். அப்போதுதான் எங்களால் எளிதாக அதனை கண்டறிய முடியும்.” என்று தெரிவித்திருக்கிறார் ஸக்கரி ரிச்சர்ட்.
பெண்ணின் வீட்டின் படுக்கை அறையில் கிடந்த அந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பை மீட்ட ஸக்கரி குழு அதனை குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த புதர் நிலத்தில் விட்டிருக்கிறார்கள்.
Eastern Brown என்ற இந்த பாம்புகள் ஆஸ்திரேலியாவில் பரவலாகவே காணக்கூடியதாக இருந்தாலும் கொடிய பாம்பாகவே கருதப்படுகிறது. கொடூர விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பின் நச்சு, நியூரோ டாக்சின்ஸ் அதிகமாக கொண்டிருப்பதால் மனிதனின் உடலில் பரவினால் பல விதமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமாம்.
இந்த பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் பக்கவாதம் ஏற்படுவதோடு, அதிகபடியாக ரத்தப்போக்கு உண்டாகும். மேலும், இந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பின் நச்சால் இதயம், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.