கார் விபத்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூலேரிக் காடு பகுதியில் கடந்த 2021ஆண்டு ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோருடன் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி சென்றார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் திடீரென நிலை தடுமாறி கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதில் யாஷிகா ஆனந்திற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டுவருகிறார். அந்தவகையில் கடந்த சில மாதங்களாக சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
மட்டுமன்றி யாஷிகா ஆனந்த் சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்கள் வட்டாரத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்நிலையில் மாமல்லபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததை தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.