இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பகல் இரவு ஆட்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் இரண்டு அரங்குகள் வேலைபாடுகள் நடந்து கொண்டிருந்ததால், எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது சென்னை ஸ்டேடியத்தின் புதிய இரண்டு அரங்குகள் தொடங்கப்பட்டு சர்வதேச போட்டிகள் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமானது. அதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே சில கிமீ அளவுக்கு வரிசையில் நின்று, கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.
போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே டிக்கெட் வி்ற்பனை தொடங்கப்பட்டதிற்கு பிறகு, மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் 22ஆம் தேதியான இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் போட்டியானது தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், போட்டி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டிக்கெட் கிடைக்காமல் சுற்றிவரும் ரசிகர்களிடம் கடைசி நேரத்தில் டிக்கெட் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் சில பேர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்றுள்ளனர்.
அதாவது குறைந்த கட்டணமாக பார்க்கப்படும் ரூ.1500 டிக்கெட்டின் விலையை 10ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை உயர்த்தி கள்ளச்சந்தையில் சில பேர் விற்றுள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.