விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற நேரடி தமிழ் படங்களால் தமிழ் சினிமா துறையின் வளர்ச்சி கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கிறது என்றாலும் கொரோனாவுக்கு முன்பும் கொரோனாவுக்கு பின்பும் வந்த படங்கள் சிலவற்றால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முழுமையான லாபத்தையும் நஷ்டத்தையும் பெறாமலேயே இருந்தார்கள் என்பது படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடியும்.

குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் என்னதால் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை வாரிக்குவித்தாலும் இண்டஸ்ட்ரி ஹிட் என்ற அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே கலவையான கருத்தையே பெற்று வருகின்றன.

Ponniyin Selvan 1 Box Office (Worldwide): Beats Vikram's 426 Crores To  Become Highest Tamil Grosser Of 2022!

அது விஜய்யின் பிகில், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களாக இருந்தாலும் சரி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களாக இருந்தாலும் சரி வசூல், விமர்சன மோதலில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற அளவுக்கே இருந்தன. ஏனெனில் தவறான வசூல் நிலவரத்தை வெளியிட்டு ரசிகரகளிடையே கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் நடுத்தர சினிமா ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக விஜய்யின் பிகில் படம் ரிலீசான போது மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையெல்லாம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்குமே கோலிவுட்டில் ஏற்படுத்தியிருந்தது. 180 கோடி ரூபாய்க்கு மேலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிகில் படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய்யை நேரடியாக வரவைத்து வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.


அதேபோல தயாரிப்பு நிறுவனமான AGS மற்றும் ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது இருப்பிடத்திலும் தீவிர ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டது. இது படத்தின் நடித்த விஜய்யை காட்டிலும் தயாரிப்பு நிறுவனத்துக்கே மிகப்பெரிய இடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை மெய்ப்பிக்கும் விதமாகதான் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி அண்மையில் நடந்த லவ்டுடே படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில், “இது ரொம்பவே சிறப்பான மேடையா நினைக்கிறேன். ஏனெனில், கடைசியாக பிகில் ஆடியோ விழாவின் போது பேசியதுதான். பிகிலுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தேன். அதன் பின் வேலையில்லாமல் இருந்தேன். லவ் டுடே ஏன் இந்த அளவுக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கிறதென்றால், வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி என ஒன்று இருக்கும். ஆனால் அதன் பிறகு நிறைய தோல்விகளை காண வேண்டி இருக்கும். அதுல இருந்து மீண்டும் ஒரு உச்சம் கிடைக்கும். அதுதான் லவ் டுடே.” இப்படியாக அர்ச்சனா கல்பாத்தி பேசியிருந்தார்.


அர்ச்சனா தன் பேச்சில் நடந்த கஷ்டமான மற்றும் சந்தோஷமான நிகழ்வுகளை விஜய்யின் பிகில் மற்றும் பிரதீப்பின் லவ் டுடே படத்தோடு ஒப்பிட்டு கூறியுள்ளதால் பிகில் படம் வசூல் ரீதியில் ஒரு தோல்வி படமாக இருக்கிறது என்பதையே உணர்த்துவதாக குறிப்பிட்டு நடுநிலை மற்றும் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

முன்னதாக, வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அதன் தயாரிப்பாளர் தில் ராஜு, “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, பாட்டு வேணுமா பாட்டிருக்கு, விஜய் சாரின் பாடி லேங்வெஜ் இருக்கு” என்றெல்லாம் பேசி பெரிதளவில் ஒரு ஹைப்பை கிளப்பியிருந்தார். ஆனால் உண்மையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு ஆந்திரா தெலங்கானாவில் சொல்லிக்கொள்ளும்படியாக ஹிட் கொடுக்கவில்லை.

இதனையடுத்து பாலகம் என்ற தெலுங்கு படத்தின் நிகழ்ச்சியின் போது, “தமிழ்நாட்டுல என்னோட பேச்சு ரொம்ப பிரபலமாகிருக்கு. இந்த படத்துல ஃபைட்ஸ் இல்ல, இந்த படத்துல டான்ஸ் இல்ல, இந்த படத்துல விஜய் சாரோட பாடி லேங்வெஜ் இல்ல, ஆனா, இந்த படத்துல சூப்பர் என்டெர்டெயின்மென்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு, சூப்பர் தெலங்கனா நேட்டிவிட்டி இருக்கு, இது நம்ம மனசுக்கு பிடிச்சமான சினிமா. இத மட்டும் சொல்லிக்கிறேன். நன்றி.” என தில் ராஜூ பேசினார்.


இந்த பேச்சை வைத்து, வாரிசு படத்தின் வசூலில் தயாரிப்பாளர் தில் ராஜூ திருப்தி அடையவில்லை என்ற வருத்தம் தெரிவதாகவும் கூறி வந்தனர். அதே நேரத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சரி, மாஸ்டர் படத்தை தயாரித்த விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோவும் சரி பல சர்ச்சைகளை சந்தித்து, வசூலை அள்ளி எடுத்திருந்தாலும் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று படங்களும் வசூல் மற்றும் விமர்சனங்களில் கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும் போனி கபூரின் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து அஜித் நடித்தார் என்ற பேச்சும் இதனூடே வைக்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.