அருணாசலப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் வீரமரணமடைந்தார்.
இதையடுத்து, அவரின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்துக்கு இன்று காலை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஜெயமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற நலச்சங்கம் அலுவலகம் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரின் உடலுக்கு அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஏராளமான கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடுப்பட்டி கிராமம் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக ராணுவ வீரர் ஜெயந்த்-ன் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
மயானத்தில் ராணுவ வீரர் ஜெயந்த் உடலில் போர்த்தியிருந்த இந்திய தேசியக் கொடியை ராணுவ மரியாதையுடன் அவரின் மனைவி சாரதா செல்வியிடம் வழங்கப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்தின் சிதைக்கு, அவரின் தந்தை ஆறுமுகம் தீ மூட்டினார். மயானம் வரை அமைச்சர் ஐ.பெரியசாமி நடந்து வந்து இறுதி சடங்குகள் முடியும் வரை இருந்தார்.