இந்தோனேஷியாவில் நேற்றைய தினம் (சரியாக நேற்று அதிகாலை 2.46 மணியளவில்) எரிமலையொன்று வெடித்து சிதறியதால், பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ மேல்நோக்கி மேகம் வரை முழுக்க முழுக்க சாம்பல் நிறத்தில் காட்சியளித்திருக்கிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
இந்தோனேஷியாவின் செமுரூ என்ற பகுதியிலுள்ள எரிமலை தொடர்ந்து சீறி வருவதால், பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை எழுந்துள்ளது என அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்த செமுரூ எரிமலை, கடந்த சில நாட்களாகவே சீறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இம்முறை எரிமலையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கான எச்சரிக்கை நிலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
On the island of #Java in #Indonesia, the volcano #Semeru has erupted. Authorities issued a warning about the danger of the maximum level. pic.twitter.com/DBRgl5Ixmd
— NEXTA (@nexta_tv) December 4, 2022
தற்போதைக்கு அங்கு எந்த இறப்பும் பதிவானதாக தகவல் இல்லை. அதேபோல விமானப் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அருகிலுள்ள இரண்டு பிராந்திய விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எரிமலைக்கு அருகிலுள்ள மக்கள் தரப்பினர் சிலர் மேற்கத்திய ஊடகங்களில் அளித்துள்ள பேட்டியில், “பல சாலைகள் இன்று (நேற்று) காலை முதல் மூடப்பட்டுள்ளன. இப்போது இங்கு எரிமலையிலிருந்து சாம்பல் மழை பெய்கிறது. மொத்த மலைகளையும் அந்த சாம்பல் மழை மூடி மறைத்துவிட்டது” என்றிருக்கிறனர்.
மேலும், அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. செமுரூ எரிமலையை தொடர்ந்து கண்காணித்து வரும் ஜப்பானின் வானிலை முகமை, `எரிமலை வெடிப்பால் கடலில் சுனாமி அலைகள் எழவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த வருடம் இதேபோல செமுரூவின் மிகப்பெரிய மலையான ஜாவா வெடித்தபோது, சுமார் 50 பேர் அங்கு உயிரிழந்தது இத்தருணத்தில் நினைவுகூறத்தக்கது. அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கோனார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் தங்க அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தோனேஷியாவின் பேரிடர் ஆணையம் தெரிவிக்கும் தகவல்களின்படி தற்போது சுமார் இந்த சாம்பல் மழை பொழியும் இடத்திலிருந்து 1,979 பேர் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், அறிவியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.