சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா ஊட்டியில் உள்ள அசெம்பிளி ரூம்ஸ் அரசுத் திரையரங்கில் நேற்று தொடங்கியது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் குறும்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 120 குறும்படங்களைத் திரையிட உள்ளனர். குறும்பட விழாவை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் அரசுத் திரையரங்கம் ஜொலிக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால புரொஜெக்டர்கள், கேமிராக்கள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
இந்தக் குறும்பட விழா குறித்துத் தெரிவித்த விழா ஏற்பாட்டாளர்கள், “ஆப்கானிஸ்தான், துருக்கி, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த 120 குறும்படங்களைத் திரையிட்டு வருகிறோம்.
சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான யானை விருதுகளை விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை வழங்க இருக்கிறோம்” என்றனர்.