தென்காசி மாவட்டத்திற்கு கழிவுகள் கொட்டும் நோக்கத்தோடு வரும் லாரி முதலாளிகள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவில் இருந்து கழிவுகள்,குப்பைகள் மற்றும் ஸ்கிராப்புகளை ஏற்றிவரும் வாகனங்கள் மூட்டை மூட்டையாக கிராமபுறப் பகுதிகளின் சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டிச்செல்வதாக தொடர் புகார்கள் எழுந்துவந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பதிவில், ”தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் கழிவுகள் குப்பைகளை கொட்டும் லாரிகள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தென்காசி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. புளியரை சோதனைசாவடியிலேயே அபராதம் விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டு வருகின்றன.
அதே போல் கடந்த 2 மாதத்தில் 40 வாகனங்களுக்கு 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில செய்திகளை அடிப்படையாக கொண்டு ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்த தகவல்களை 9385678039 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.