கொரோனா தடுப்பூசி காரணமாக நிகழும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக அவர்களின் பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமானால் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் தடுப்பூசி மரணங்கள் குறித்து விளக்கம் கேட்டிருந்த நிலையில், 276 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. அதில், தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்பட்டால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இழப்பீடு கோரலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மீது முழு அனுதாபங்கள் இருப்பதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதையும் படிக்க: கொரோனாவுக்கு இணையான அச்சுறுத்தலா கேமல் ஃப்ளூ? MERS தொற்றின் அறிகுறிகளும் தாக்கங்களும்!