கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் அரங்கை தூய்மைப்படுத்திய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிஃபாஃ கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நேற்று குரூப் ஈ பிரிவில் உள்ள ஜெர்மனி – ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் அரங்கை தூய்மைப்படுத்திய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
போட்டியின்போது ரசிகர்கள் கொண்டுவந்த பதாகைகள், உணவு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் என குப்பையில் போட வேண்டிய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதனை பார்த்த ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர். ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவில் ஜப்பான் ரசிகர் ஒருவரிடம் ‛இதை ஏன் செய்கிறீர்கள்’ என்று உள்ளூர் ரசிகர் ஒருவர் கேட்டபோது, ”நாங்கள் ஜப்பானியர்கள். இந்த இடத்தை மதிக்கிறோம்; மைதானத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதே எங்கள் கடமை. ஒரு இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இதை பள்ளிப் பருவத்திலிருந்தே எங்களுக்கு கற்றுக்கொடுத்தனர்” என்றார். ‘ஜப்பானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது’ எனப் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: வங்கதேச தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா – இதுதான் காரணமா?