நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).  இவருடைய கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 30 வயது நிரம்பிய தன் மகனுடன் தனியாக குடிசை வீட்டில் வருமானமின்றி மிகுந்த கஷ்டத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மூதாட்டி நாகவள்ளிக்கு வழங்கப்பட்டு வந்த மாத உதவித்தொகை கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், வருமானமின்றி தன் மாற்றுத்திறனாளி மகனுடன் பரிதவித்து வரும் மூதாட்டியின் நிலை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், வீடியோ எடுத்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜூக்கு அனுப்பியிருக்கிறார். அதனைக் கண்ட கலெக்டர் உடனடியாக வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலரைத்  தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக வீடு கட்டித்தர உத்தரவிட்டார்.

மூதாட்டிக்கு உதவிய கலெக்டர்

அதைத் தொடர்ந்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரை தொடர்பு கொண்டு அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய சொன்னதுடன், மருத்துவமனைக்கு அரசு செலவில் அவரை அழைத்து வரச் சொன்னார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், வேண்டிய பொருள்களை உடனே வழங்கவும், `5 மாதங்களாக நின்றுபோன மாத உதவித்தொகையை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்!’ எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

மாற்றுத்திறனாளிக்கு நேரில் சென்று உதவிய கலெக்டர்

உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று உதவிகளுக்கான பணிகளை முழுவீச்சில் செய்தனர். இந்த நிலையில் திடீரென்று கலெக்டர் அந்த வீட்டுக்கு நேரில் சென்று  வீல்சேர், வாட்டர் பெட், 2 ஊன்றுகோல்கள், மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

தனக்கு தகவல் கிடைத்த 30 நிமிடங்களில், கலெக்டர் அருண் தம்புராஜ் அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவு பிறப்பித்ததோடு, நேரில் சென்று ஆறுதல் கூறியது அந்தக் குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்தது. மேலும் அந்தப் பகுதி மக்கள் கலெக்டரைப் பாராட்டி வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.