தீப்பெட்டி தொழிலை பாதிப்பதாக கூறும் சிகரெட் லைட்டர் இறக்குமதி தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
தீப்பெட்டி துறையில் ஜி.எஸ்.டி தொகை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்தமைக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு உள்ளிட்ட அனைத்து இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து, தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்.
அதில், கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தீப்பெட்டிகளின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வித உதவிகளும் செய்யப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “உலக அளவில் நூறு தீப்பெட்டிகள் இருந்தால் அதில் 30 சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். இந்தத் தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்து, தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வித உதவிகளும் செய்யப்படும். பொதுவாழ்வில் இருக்கும் போது, அதுவும் நாம் பிறந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி என்பது தேவையில்லை. அதுபோன்ற எண்ண ஓட்டத்தில் நான் செயல்படுவதும் இல்லை” என்றார்.
Smt @nsitharaman addresses the audience at All India Conference of Safety Matches in Surajkund, Faridabad. pic.twitter.com/StDPJ1o8El
— NSitharamanOffice (@nsitharamanoffc) November 15, 2022
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கூறுகையில், “தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரியை 12%ஆக குறைத்து, அந்த தொழில்லுக்கு புத்துயிர் அளித்துள்ளார். அதற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக செயல்படுபவர் அவர். பாரதி கண்ட புதுமை பெண் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்” என்றார்.