கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, 7 கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதாக’, மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

லாரிகளால் ரோடுகள் சேதம் அடைந்து வருவதாகவும், அவ்வப்போது விபத்து நடப்பதாகவும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதுடன், விளைநிலங்கள் பாதிப்பதாகக்கூறி, ஆடு, மாடுகளுடன் சப் – கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம், சாலை மறியல் என பல போராட்டங்கள் நடத்தினர்.

‘டென்ட்’ அமைத்துள்ள பகுதியில் சமைக்கும் மக்கள்.

இந்நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த, 11-ம் தேதி ஒட்டுமொத்த கிராம மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறி, 2 கி.மீ., தொலைவில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ‘டென்ட்’ அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, 15-ம் தேதி, 5-வது நாளாக போராட்டம் நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், கொரட்டகிரி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தை விட்டு வெளியேறி ‘டென்ட்’ அமைத்துள்ள கிராம மக்கள்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில், “லாரிகள்ல எம்.சாண்டு, கல் கொண்டு போரதால, தினம் வீட்டுக்குள்ள மண், தூசியா வருது. குழந்தைங்க, பெரியவங்க மூச்சு விடவே சிரமப்படுறாங்க. இரவெல்லாம் வெடி வைக்குறாங்க. குவாரிகளோட அத்துமீறலால இங்க வாழவே முடியல, ஒரு நாள் கூட நிம்மதியா துாங்க முடியல. அதிகாரிங்களோட இன்னைக்கு (15ம் தேதி) நடந்த பேச்சாவார்த்தையில, கமிட்டி அமைச்சு விசாரிச்சு நடவடிக்கை எடுப்போம்னு கலெக்டர் சொன்னாரு. எங்களுக்கு இதுல துளியும் உடன்பாடு இல்ல.

எங்க கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்த கைவிடமாட்டோம். முதல்வர் இப்பிரச்னையில தலையிட்டு சீக்கிரம் ஏழு குவாரிகளையும் நிரந்தரமா மூடணும்” என, வருத்தம் கலந்த கோபத்துடன் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.