தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார் தினேஷ் கார்த்திக்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்தது இந்தியா. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்த சமயத்தில் களத்திற்குள் வந்தார் தினேஷ் கார்த்திக். அணியை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தும் கட்டாயத்தில் இருந்த அவரால் 15 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. 16வது ஓவர் தொடங்கும் முன் அவர் பெவிலியன் திரும்பிய நிலையில், ரிஷப் பண்ட் மாற்றாக களத்திற்குள் வந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு முதுகு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக போட்டி முடிந்தபின் புவனேஷ்வர் குமார் பேட்டியின் ஒன்றில் கூறினார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, தினேஷ் கார்த்திக் ‘ஸ்டெம்பிட்’ ஆகி சொதப்பினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். இதனால் தினேஷ் கார்த்திக் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. வரும் நவம்பர் 2ஆம் தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது சந்தேகம்தான். அவருக்கு பதில் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்கலாமே: IND Vs SA டி20 உலகக்கோப்பை: வீணானது சூரியகுமாரின் அதிரடி!