கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்துள்ளநிலையில், தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
ராஜராஜசோழனின் கதையை மையமாக வைத்து, அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் 3-வது வாரத்தை தொட்டுள்ள நிலையில், தற்போதும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்து ‘பொன்னியின் செல்வன்’ சாதித்துள்ளது. 17 நாட்களில், தமிழில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை தமிழகத்தில் ஓவர்டேக் செய்தநிலையில், தற்போது ஒட்டுமொத்த அளவிலும் முந்தி, ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தை அடுத்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’. ‘விக்ரம்’ படம், 446 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ 17 நாட்களிலேயே 450 கோடி ரூபாய் வசூலித்து, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ சாதனையை முறியடித்துள்ளது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ படங்கள் வருகிற 21-ம் தேதி வெளியாகிறது. ஆனால் தற்போதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் புக்கிங் நன்றாக சென்றுக் கொண்டிருப்பதால், அதற்குள் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் ‘2.0’ படம் 800 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. அந்த வசூலை ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் மட்டுமே முறியடிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.