வங்காளதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அந்நாட்டில் 14 கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளனர்.
வங்காளதேசம் நீண்டகாலமாகவே மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது. எனவே அந்நாடு கணிசமான மின்சாரத்தை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து விலைக்கு வாங்குகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தின் கிழக்குப்பகுதியில் இன்று மதியம் மின் விநியோக கட்டமைப்பில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக வங்காளதேசத்தில் இன்று பிற்பகலில் மட்டும் 14 கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது என்றும் அதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மின் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில மின் நிலையங்கள் சில மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. ஆனால் முழு அளவில் மறுபடியும் எப்போது மின் இணைப்பு வரும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: 3,800 கோடி நஷ்ட ஈடு கோரி செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டொனால்ட் டிரம்ப்! எதற்காக?