காந்திநகர் – மும்பை இடையே “வந்தே பாரத்” ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். 

இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல வசதிகளை கொண்ட “வந்தே பாரத்” ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் கட்டப்பட்டவை. இந்த ரயிலின் கட்டுமானத்தில் சேவையாற்றிய ஊழியர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். காந்திநகர் ரயில் நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இருந்தனர். “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை பார்வையிட்டார். “வந்தே பாரத் “எக்ஸ்பிரஸ் 2.0-ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் மோடி ஆய்வு செய்தார்.

image

பின்னர் காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான “வந்தே பாரத்” எக்ஸ்பிரசின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து,
அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தனது சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். “வந்தே பாரத்” ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் மோடி உரையாடினார்.

காந்திநகர் மற்றும் மும்பை இடையே “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் 2.0 பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்தியாவின் இரண்டு வணிக  மையங்களுக்கு இடையேயான பயணத்தை இந்த ரயில் விரைவுபடுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். “இது குஜராத்தில் இருந்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மும்பைக்கு பயணிக்க உதவும், மேலும் விமானத்தில் கிடைக்கும் வசதிகளைப் போல குறைந்த செலவில் மும்பைக்கு பயணிக்க இது உதவும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் 2.0 -ன் ஒருவழிப்பயண நேரம் சுமார் 6 முதல் 7 மணிநேரமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

image

“வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் 2.0 எண்ணற்ற சிறந்த, விமானப்பயணம் போன்ற பயண அனுபவங்களை வழங்குகிறது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் ஆகும்”
என அதிகாரிகள் தெரிவித்தனர். “விபத்துக்களை தடுக்க, “மோதல் தவிர்ப்பு” அமைப்பான “கவாச்” உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. “வந்தே பாரத்” ரயில், 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்டது. பிற ரயில்களின் எடை 430 டன்கள் உள்ள நிலையில், இந்த நவீன ரயிலின் எடை 392 டன்னாக உள்ளது. இது
தேவைக்கேற்ப Wi-Fi உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் 32″ திரைகள் பொருத்தப்பட்டுள்ளன, இது முந்தைய பதிப்பில் இருந்த 24″ உடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சிறப்பான தகவல் மற்றும்
இன்ஃபோடெயின்மென்ட் சேவைகளை வழங்கும். “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் ஏசிகள் 15 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும்” எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். “இழுவை மோட்டாரின் தூசி இல்லாத சுத்தமான காற்று குளிர்ச்சியுடன், இந்த ரயிலில் பயணம் மிகவும் வசதியாக இருக்கும். முன்பு எக்சிக்கியூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த பக்கவாட்டு சாய்வு இருக்கை வசதி, இப்போது அனைத்து வகுப்புகளுக்கும்
கிடைக்கும்” என அதிகாரிகள் தெரிவித்தனர். எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

image

“வந்தே பாரத்” எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச் சுத்திகரிப்பதற்காக கூரை-மவுண்டட் பேக்கேஜ் யூனிட்டில் புகைப்பட-வினையூக்கி புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, இந்த அமைப்பு ஆர்எம்பியூ-வின் இரு முனைகளிலும்
வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டு, கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்” என ரயில்வே தெரிவித்தது.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.