மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது டெல்லி துணை நிலை ஆளுநர், சில அரசு அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் 15 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஐ அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகளின் இல்லத்தில் இப்படி வந்து சோதனை செய்வது வருந்தத்தக்க செயல். இதற்கு முன்னால் எங்கள் அமைச்சர் குறிவைக்கப்பட்டார். இப்போது அந்த குறி என் மீது திரும்பியிருக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ,”புகார் எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் என்ன வகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து அறிக்கை வெளியிடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சிலர், “எங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு சோதனைகள் ஏவிவிடப்படலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.