நாட்டில் அண்மைக்காலமாக அரசியல் கட்சிகளின் இலவசங்கள் (ஃப்ரீபீஸ்) குறித்த விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க, அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்து விமர்சிப்பதும், அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றுவதும் என அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்த இலவசங்கள் குறித்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இந்தியா போன்ற நாட்டில் இலவசங்கள் வேண்டாம் என உத்தரவிட முடியாது. அதேசமயம் இலவசங்களும் சமூகநலத் திட்டங்களும் வெவ்வேறானவை” எனக் கூறியிருந்தார்.
பின்னர் இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், தி.மு.க நேற்று தலையீட்டு மனுவைத் தாக்கல்செய்திருந்தது. இந்த நிலையில் தி.மு.க-வின் தலையீட்டு மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணையில் தி.மு.க தரப்பு, “நாங்கள் தலையீட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். இந்தியா ஒரு சோசலிச நாடு. இங்கு நலத்திட்டங்கள் இருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம், பரிந்துரைக் குழு அமைப்பதை எதிர்க்கிறோம்” என்று வாதிட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து வாக்குறுதியளிப்பதை நீதிமன்றத்தால் தடுக்க முடியாது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதென்பது அரசின் கடமை. மேலும், எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு. அதேசமயம், எங்களால் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அர்த்தமில்லை” என்று கூறினார்.