மும்பை அருகில் உள்ள விரார் பகுதியில் வசிப்பவர் அபிஷேக்(22). இவர் கடந்த 2016-வது ஆண்டிலிருந்து நிஷா(20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். நிஷா மலபார் ஹில் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அபிஷேக்கிடம் நிஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தை தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் அபிஷேக். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடைசியாக ஏற்பட்ட தகராறில் நிஷா, தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அபிஷேக்கை மிரட்டிவிட்டு சென்றார் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்னைக்கு முடிவு கட்ட அபிஷேக் திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 31-ம் தேதி அபிஷேக் போன் செய்து இப்பிரச்னை குறித்து விவாதிக்க வரும்படி நிஷாவிடம் கேட்டுக்கொண்டார்.
நிஷாவும் அபிஷேக் சொன்ன இடத்திற்கு வந்தார். அவரை ரயிலில் அழைத்துக்கொண்டு பயந்தர் என்ற இடத்திற்கு சென்றார் அபிஷேக். அவரை அழைத்துக்கொண்டு ரயில்வே மேம்பாலத்தில் அபிஷேக் நடந்து சென்றார். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். அந்நேரம் நிஷாவை கடலுக்குள் பிடித்து தள்ளிவிட்டுவிட்டார்.
நிஷா காணாமல் போனது குறித்து அவரின் சகோதரர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நிஷாவின் மொபைல் போன் கடைசியாக எங்கு இருந்தது என்பதை ஆய்வு செய்த போது பயந்தர் பகுதியில் காட்டியது. இதையடுத்து போலீஸாருக்கு அபிஷேக் மீது சந்தேகம் ஏற்பட்டது. அபிஷேக்கும் நிஷாவும் ஏற்கனவே தொடர்பில் இருந்தது நிஷாவின் சகோதரருக்கும் தெரிந்திருந்தது. நிஷாவின் சகோதரர் கொடுத்த தகவலின் பேரில் அபிஷேக்கை பிடித்து விசாரித்த போது நிஷாவை கடலில் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. உடனே கடலில் தேடிப்பார்த்ததில் நிஷாவின் உடல் கடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அபிஷேக் கைது செய்யப்பட்டார்.