நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், விராட் கோலியை கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை அணியில் விளையாட வைப்பேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தி ஐசிசி ரிவியூவில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி இல்லாத இந்திய அணியில் ஒரு கேப்டனாக அல்லது ஒரு வீரராக விளையாட தான் பயப்படுவேன் என தெரிவித்துள்ளார். “விராட் கோலி இணைந்தால் மட்டுமே இந்தியா அணிக்கு ஏற்படும் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். விராட் கோலி இல்லாத இந்திய அணியில் ஒரு கேப்டனாக அல்லது ஒரு வீரராக விளையாட நான் பயப்படுவேன்.
அவருக்கு சில சவால்கள் இருந்ததை நான் அறிவேன். அவருக்கு இது கடினமான நேரம். ஆனால் இந்த விளையாட்டில் நான் பார்த்த ஒவ்வொரு சிறந்த வீரரும் இந்த கட்டத்தை கடந்திருக்கிறார்கள். அது ஒரு பேட்டராக, பவுலராக எப்படி இருந்தாலும் அனைவரும் இதை சந்தித்து உள்ளனர். சிறந்த வீரர்கள் மீண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடித்தனர். விராட் அதைச் செய்வதற்கு இன்னும் சிறிது காலம் மட்டுமே தேவை.
உலகக் கோப்பைக்கு முன்னதாக அவரை அணியில் இருந்து நீக்கும்போது வேறு யாராவது அவரது இடத்தை நிரப்பக்கூடும். அதன்பின் அவர் அணியில் இடம்பெறுவது கடினமாக மாறிவிடும். நான் இந்திய வீரராக இருந்தால், கோலியை பின் தொடர்ந்து செல்வேன். நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் அவர் முடிந்தவரை வசதியாக விளையாடுவதை உறுதி செய்வேன். அவர் மீண்டும் ரன்கள் அடிக்க துவங்கும் வரை காத்திருப்பேன்.
நான் அவரிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘இது உங்கள் இடம் விராட்! இங்கே நீங்கள் பேட்டிங் செய்கிறீர்கள். முன்பும் இதே இடம் தான்! இந்த இடம் மாறவில்லை. உங்களை நம்புங்கள். கடின உழைப்பில் ஈடுபடுங்கள். பல ஆண்டுகளாக உலகின் சிறந்த வீரராக திகழ்ந்தீர்கள். அந்த எண்ணங்களுக்குத் திரும்புங்கள். ரன்கள் தானாக வரும்!’”என்று கோலிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கூறினார் பாண்டிங்.